சீனாவின் கடுமையான ஸ்மார்ட்போன் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் ஆப்பிளின் முயற்சிக்கு, பீஜிங் அதிகாரிகள் அலிபாபாவுடன் இணைந்த ஏஐ ஒத்துழைப்புக்கு அனுமதி வழங்க தாமதிப்பதால், பெரிய தடையாக அமைந்துள்ளது.
2025 பிப்ரவரியில் முதலில் அறிவிக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு, சீனாவில் விற்கப்படும் ஐபோன்களில் அலிபாபாவின் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், சீனாவின் கடுமையான ஒழுங்குமுறை சூழலில் ஆப்பிள், உள்ளூர் ஒத்துழைபாளராக அலிபாபாவை பெற்றுள்ளது. அலிபாபா தலைவர் ஜோ சாய், "சீனாவில் பல நிறுவனங்களை ஆப்பிள் தொடர்புகொண்டது. இறுதியில் எங்களுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு செய்ய தீர்மானித்தது," என உறுதிப்படுத்தினார்.
ஆனால், சீனாவின் இணையதள நிர்வாகம் (CAC) அனுமதி கோரிய விண்ணப்பங்கள் தாமதமாகியுள்ளன. இதற்கான முக்கிய காரணமாக, சீனா-அமெரிக்கா இடையிலான "அரசியல் மற்றும் வர்த்தக நிலைமைகள்" குறிப்பிடப்படுகின்றன. சீன விதிகளின்படி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து ஏஐ சேவைகளும் வெளியீட்டுக்கு முன் கட்டாயமாக ஒழுங்குமுறை அனுமதி பெற வேண்டும். எனவே, இந்த தடை, சீனாவில் ஆப்பிளின் ஏஐ திட்டத்திற்கு முக்கியமான தடையாக உள்ளது.
இது ஆப்பிளுக்கு மிகவும் மோசமான நேரமாக அமைந்துள்ளது. 2023 தொடக்கத்தில் சீனாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் 70% பங்குடன் இருந்த ஆப்பிள், 2025 முதல் காலாண்டில் 47% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நேரத்தில், உள்ளூர் போட்டியாளர் ஹுவாவே 35% சந்தைப் பங்கை எட்டியுள்ளது; மேலும், DeepSeek நிறுவனத்தின் ஏஐ மாதிரிகளை தனது சாதனங்கள் மற்றும் கிளவுட் சேவைகளில் ஒருங்கிணைத்துள்ளது.
தொழில்துறை விமர்சகர்கள், புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களில் முக்கியமான விற்பனை அம்சமான மேம்பட்ட ஏஐ வசதிகள் இல்லாதது, சீன சந்தையில் ஆப்பிளுக்கு பெரும் குறையாக இருப்பதாகக் கருதுகின்றனர். மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், அலிபாபாவுடன் ஆப்பிள் இணைந்திருப்பது "சீனாவில் ஆப்பிளின் போட்டித் திறனுக்கான முக்கிய ஊக்கியாகும்" என முன்பே தெரிவித்திருந்தது. இது, சீனாவில் ஐபோன் விற்பனை வீழ்ச்சியை சமாளிக்க உதவும் எனவும் அவர்கள் கருதினர்.
இந்த தாமதம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரபரப்பான சூழலில் நிகழ்கிறது. அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இறக்குமதி மின்னணு சாதனங்களுக்கு புதிய வரிகள் விதிப்பதாகவும், ஆப்பிள் தனது உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார். 2025 மே மாதத்தில், ஆப்பிள் உற்பத்தியை சீனாவிலிருந்து மாற்றாவிட்டால், 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார். இதனால், சீன சந்தையில் ஆப்பிளின் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.