பிரிட்டனின் பழைய மற்றும் சிரமமான திட்டமிடல் அமைப்பை நவீனப்படுத்தும் முக்கிய முயற்சியாக, பிரதமர் கியர் ஸ்டார்மர் 'எக்ஸ்ட்ராக்ட்' எனும் ஏஐ உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளார். இது முழு பிரிட்டனிலும் திட்ட அனுமதிகள் வழங்கும் முறையை புரட்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லண்டன் டெக் வீக்கில் அறிவிக்கப்பட்ட இந்த எக்ஸ்ட்ராக்ட் கருவி, கூகுளின் ஜெமினி ஏஐ மாதிரியை பயன்படுத்தி, தெளிவற்ற வரைபடங்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் உள்ளிட்ட திட்ட ஆவணங்களை சில நிமிடங்களில் தெளிவான டிஜிட்டல் தரவாக மாற்றும் திறன் கொண்டது. வழக்கமாக பல மணி நேரம் பிடிக்கும் இந்த பணியை, எக்ஸ்ட்ராக்ட் விநாடிகளில் நூற்றுக்கணக்கான கோப்புகளை ஸ்கேன் செய்து முடிக்கிறது. இதனால் ஆண்டுதோறும் திட்ட அதிகாரிகள் செலவிடும் 2,50,000 மணிநேரம் பெரிதும் குறைக்கப்படும்.
"நம்முடைய பழைய திட்டமிடல் அமைப்பு நாடு முழுவதும் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி, முக்கியமான உட்கட்டமைப்பு மற்றும் வீடுகள் கட்டும் முயற்சிகளை மெதுவாக்கியுள்ளது. எக்ஸ்ட்ராக்ட் மூலம், ஏஐ-யின் சக்தியை பயன்படுத்தி அதிகாரிகள் தேவையற்ற நடைமுறைகளை குறைத்து, விரைவில் முடிவெடுக்கவும், உழைக்கும் மக்களுக்கு புதிய வீடுகளை வழங்கவும் உதவுகிறோம்," என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஜெமினியின் முன்னேற்றமான காட்சி பகுப்பாய்வு திறன்களை பயன்படுத்தும் இந்த அமைப்பு, வரைபடங்களில் தேவையான அம்சங்களை கண்டறிந்து, முகவரிகள், சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களை அடையாளம் காண்கிறது. இதன் மூலம் பழைய திட்ட ஆவணங்களுக்கு நவீன, நிலைபடுத்தப்பட்ட (geolocated) டிஜிட்டல் பதிப்புகளை உருவாக்க முடிகிறது. ஹில்லிங்டன், நுனீட்டன் & பெட்வொர்த் மற்றும் எக்ஸெட்டர் நகராட்சிகளில் நடத்தப்பட்ட சோதனை பரிசோதனைகளில், எக்ஸ்ட்ராக்ட் ஒவ்வொரு திட்ட பதிவையும் வெறும் 3 நிமிடங்களில் டிஜிட்டல் ஆக்கியது. இதற்கு வழக்கமாக 1-2 மணி நேரம் தேவைப்படும்.
ஏற்கனவே, இந்த தொழில்நுட்பம் 18 திட்ட அனுமதிகள் மற்றும் 18 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு (விமான நிலைய விரிவாக்கம், டேட்டா சென்டர்கள், பெரிய வீடமைப்பு திட்டங்கள் உள்ளிட்டவை) ஒப்புதல் வழங்க உதவியுள்ளது. 2026 வசந்த காலத்துக்குள் அனைத்து நகராட்சி கவுன்சில்களுக்கும் எக்ஸ்ட்ராக்ட் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த ஆண்டின் இறுதிக்குள் திட்டமிடல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் செய்யும் இலக்குடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டம், 15 லட்சம் வீடுகள் கட்டும் அரசின் இலக்கை அடைய, உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 'திட்டமிடல் மற்றும் உட்கட்டமைப்பு மசோதாவின்' (Planning and Infrastructure Bill) முக்கிய பகுதியாகும். இந்த மசோதா, திட்ட அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், முடிவெடுப்பை மேம்படுத்தவும், முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களை விரைவில் நிறைவேற்றவும் வழிவகுக்கும் விதிகளை கொண்டுள்ளது.
துணை பிரதமர் மற்றும் வீடமைப்பு செயலாளர் ஏஞ்சலா ரெய்னர், "எக்ஸ்ட்ராக்ட் முற்றிலும் பழுதடைந்த திட்டமிடல் அமைப்பை சீரமைத்து, தாமதங்களை குறைத்து, செலவுகளை சேமித்து, நகராட்சிகளின் சுமைகளை குறைத்து, ஒரு தலைமுறையில் மிகப்பெரிய கட்டுமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என தெரிவித்துள்ளார்.