நார்வே அரசின் சொத்துநிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கோலை டாங்கன், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை நிறுவனத்தின் சுமார் 670 ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கியுள்ளார். "இது விருப்பத்திற்குரியது அல்ல. AI பயன்படுத்துவது கட்டாயம். பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் பதவி உயர்வு பெற முடியாது; வேலைக்கே சேர முடியாது," என அவர் சமீபத்திய ஒரு பேட்டியில் வலியுறுத்தினார். உலகின் மிகப்பெரிய $1.8 டிரில்லியன் சொத்துநிதி நிறுவனமான இதன் ஊழியர்கள், AI பயன்பாட்டின் மூலம் கணிசமான செயல்திறன் முன்னேற்றத்தை கண்டுள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உள்நிலை ஆய்வில், ஊழியர்கள் 15% செயல்திறன் வளர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். டாங்கன், இந்த வளர்ச்சி 2025-இல் 20% ஆகவும், அதற்குப் பிறகு மேலும் 20% ஆகவும் அதிகரிக்கும் என நம்புகிறார். இதனால், AI பயன்படுத்தாத போட்டியாளர்களை விட நிறுவனம் 50% முன்னிலை பெறும் வாய்ப்பு உள்ளது.
AI தொழில்நுட்பம் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளை மாற்றியமைத்துள்ளது. முன்பு பல நாட்கள் எடுத்துக்கொண்ட பணிகள்—உதாரணமாக, 16 மொழிகளில் முதலீட்டுகளைப் பற்றிய செய்திகளை கண்காணித்து, அந்த தகவல்களை நிறுவனம் பொறுப்புடன் செயல்படுகிறதா என்பதை மதிப்பீடு செய்வது—இப்போது சில நிமிடங்களில் முடிகிறது. மேலாளர்களின் ஊதியத் திட்டங்களை மதிப்பீடு செய்யவும் AI பயன்படுத்தப்படுகிறது; 40-50 பக்க ஆவணங்களை 95% துல்லியத்துடன் பகுப்பாய்வு செய்து, ஆதரிக்க வேண்டுமா, எதிர்க்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறது.
நிறுவனம் பல்வேறு AI கருவிகளை பயன்படுத்துகிறது. அதில், Anthropic PBC-வின் Claude-ஐ அனைத்து ஊழியர்களும் பயன்படுத்துகிறார்கள். கூடுதலாக, Microsoft Copilot, Perplexity, Cursor, Open AI Deep Research, Google AI போன்ற கருவிகளும் பயன்பாட்டில் உள்ளன. தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதால், நிறுவனத்தில் புதிய பணியாளர்களை சேர்க்கும் எண்ணிக்கை குறையும் என்றும், எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதே முக்கிய இலக்காக இருக்கும் என்றும் டாங்கன் தெரிவித்தார்.
தற்போது இரண்டாவது முறையாக CEO-வாக நியமிக்கப்பட்டுள்ள டாங்கனின் எதிர்காலக் கண்ணோட்டத்துடன் இந்த AI கட்டாயம் இணைந்துள்ளது. "எல்லா இடங்களிலும், எல்லா நேரமும் 1% மேம்பாடு" என்பதே அவரது நோக்கம்; அதில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் 8,500-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து, மொத்தமாக பட்டியலிடப்பட்ட பங்குகளில் சுமார் 1.5% பங்குகளை வைத்திருக்கும் இந்த நிதி நிறுவனம், தனது பரந்த முதலீட்டுத் தொகுப்பில் சிறந்த முடிவுகளை எடுக்க AI-யை பயன்படுத்துகிறது.
நார்வே அரசின் சொத்துநிதி நிறுவனம் மட்டுமல்ல; Shopify மற்றும் JPMorgan Chase போன்ற மற்ற பெரிய நிறுவனங்களும் ஊழியர்களுக்கு AI-யை கட்டாயமாக்கியுள்ளன. JPMorgan-இல் AI பயன்பாட்டு வழிகள் இந்த ஆண்டு 400-இருந்து 1,000-க்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.