AI மென்பொருள் வளர்ச்சி துறையில் முன்னணி நிறுவனமாக இருந்த Builder.ai, இந்த மாதம் திடீர் வீழ்ச்சிக்கு முன் அமெரிக்க அதிகாரிகளின் சட்ட விசாரணைக்கு உட்பட்டது. இது, அதிக மதிப்பீட்டில் இயங்கும் AI ஸ்டார்ட்அப்புகளில் நிதி வெளிப்படைத்தன்மை குறைவு குறித்து எழும் கவலைகளை வெளிப்படுத்துகிறது.
Bloomberg பெற்ற ஆவணங்களின்படி, நியூயார்க் தெற்கு மாவட்ட அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம், 2025 மே 8 அன்று, Builder.ai நிறுவனத்திடம் நிதி அறிக்கைகள், கணக்கு கொள்கைகள் மற்றும் வாடிக்கையாளர் பட்டியல்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. நிறுவனத்தின் பொதுச் சட்ட ஆலோசகர் ஆதி வின்யார்ஷ், ஊழியர்களுக்கு இந்த கோரிக்கையை சார்ந்த அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க அறிவுறுத்தினார்.
Builder.ai ஏற்கனவே பல நிதி முறைகேடுகளால் போராடிக் கொண்டிருந்தது. 2025 மார்ச் மாதம், முன்னாள் ஊழியர்களின் புகாரை தொடர்ந்து, விற்பனை வருவாய் அதிகமாக காட்டப்பட்டதாகக் கூறி, நிறுவனம் தன்னிச்சையாக கணக்காய்வாளர்களை நியமித்தது. பின்னர் நடந்த உள் விசாரணையில், 2023-ஆம் ஆண்டுக்கான வருவாய் 300% அதிகமாகக் காட்டப்பட்டு, உண்மையில் $45 மில்லியன்தான் இருந்தது என்பது தெரியவந்தது.
2016-இல் சச்சின் தேவ் துகல் நிறுவிய, லண்டனை தலைமையிடமாக கொண்ட Builder.ai, குறியீட்டு அறிவு இல்லாமல் தனிப்பயன் செயலிகள் உருவாக்கும் AI பிளாட்ஃபாரமாக தன்னை நிலைநிறுத்தியது. இந்த வாக்குறுதியால் Microsoft, Qatar Investment Authority, SoftBank உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து $450 மில்லியனுக்கும் அதிகமான முதலீடு பெற்றது. 2023-இல் அதன் மதிப்பீடு $1.5 பில்லியனாக உயர்ந்தது.
2025 பிப்ரவரியில் நிறுவனர் துகல் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மன்ப்ரீத் ராடியா பதவி ஏற்றார். ராடியா 35% ஊழியர்களை குறைத்தும், காலாண்டு செலவுகளை $40 மில்லியனிலிருந்து $21 மில்லியனாக குறைத்தும், நிறுவனம் மீட்பு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், 2025 மே மாதம் Viola Credit என்ற கடனாளி கணக்கிலிருந்த $37 மில்லியனை கைப்பற்றியதும், ஊதிய செலவுக்கே போதுமான பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.
2025 மே 20 அன்று, ராடியா, மீதமுள்ள சுமார் 770 ஊழியர்களிடம் Builder.ai திவாலா நடவடிக்கையில் நுழைவதாக அறிவித்தார். நிறுவனம் வீழ்ச்சியடைந்த போது, Amazon Web Services-க்கு $85 மில்லியன், Microsoft-க்கு $30 மில்லியன் ஆகியவை நிலுவையில் இருந்தன.